Wednesday, September 30, 2009

Natpu kalam Part II - Aruvumathi Kavithigal

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....


தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

 
என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு


நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்


போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்

'எனக்கு மட்டும்' என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
'வெளி'வாங்கிப்
பூக்கிறது
நட்பு

கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன


சேர்ந்து
நிழற்படம்
எடுத்துக் கொண்டு
அடிக்கடி
மடல் எழுதுவதாகச்
சொல்லிக் கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்க‌ச்
சிரிக்க‌ப்
பேசுகிறார்கள்
இவர்கள்


இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது
யார்


ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Just Rate It